'காவலாளி கொலையில் நியாயம் கிடைக்கணும்' - கொடநாடு வழக்கு விசாரணையில் சசிகலா கூறியதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று தனிப்படை போலீஸார் விசாரணையின்போது சசிகலா கூறியுள்ளதாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்.பி ஆசிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீட்டுக்குச் சென்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.

அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்புப் பணியை யாரிடம் கொடுத்தீர்கள்?, எஸ்டேட்டின் சிசிடிவி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த தினேஷ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்னர் உங்களிடமோ, உங்களது உறவினரிடமோ பேசினாரா?, சிசிடிவி காட்சிகளை எத்தனை நாட்களாக தினேஷ்குமார் ஆய்வு செய்து வந்தார்?, கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து முன்கூட்டியே தெரியுமா? கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதலில் யாரிடம் தகவல் தெரிவத்தார்?, எப்போதும் மின்தடை ஏற்படாத பகுதியான கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து யாரிடமாவது கேட்டீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டன. இதற்கு சசிகலா அளித்த பதில்களை போலீஸார் பதிவு செய்தனர்.

10 மணி நேர விசாரணை: நேற்று (ஏப்.21) 6 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று 4 மணி நேரம் என மொத்தம் 10 மணி நேரம் சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த விசாரணைக்குப் பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வழிகாட்டுதலின் அடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கபட்டு அந்த அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினா்.

காவல்துறையின் விசாரணைக்கு என்னென்ன விஷயங்கள் தேவையானதாக இருக்கிறதோ, இதுவரை யார் யாரையெல்லாம் விசாரித்து இருக்கிறார்களோ, அதன் அடிப்படையில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லா கேள்விகளுக்கும் சரியான வகையில் சசிகலா பதிலளித்துள்ளார். அந்த பதில்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

காவலாளி கொலை செய்யப்பட்டிருக்கிறார், இதில் சந்தேகம் இல்லாமல் எப்படி கடந்துபோக முடியும். எங்களிடம் பணியாற்றிய நபர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன் நெருக்கமாக நின்று பேசக் கூடிய நபர், இதுபோல உயிரைக் கொடுத்திருக்கிறார் என்கிறபட்சத்தில் கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சசிகலா கூறியிருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE