தமிழத்தில் XE திரிபு கரோனா இல்லை; முன்னெச்சரிக்கை அவசியம்: ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் 25 முதல் 30 க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.

எனவே மற்ற மாநிலங்களில் அதிகரித்துவரும் கரோனா தொற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வலியுறுத்தி ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், "தமிழகத்தில் கரோனோ பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் , முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி , மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்த வேண்டும்.

தேவையான நபர்களுக்கு பிசிஆர் கரோனோ பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல் , மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்தல் , உருமாறும் ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திட வேண்டும். பொது மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்துள்ள நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாகக் குறைந்துவிட்டது. அரசின் வழிகாட்டுதலில் உள்ள முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கை கழுவுதல் உள்ளிட்ட பழக்கங்களை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 93% ஒமிக்ரான் BA2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் , XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE