உதகையில் குதிரைப் பந்தயம் தொடங்கியது: தமிழ்ப் புத்தாண்டு கோப்பையை வென்றது ‘டார்க் சன்’

By செய்திப்பிரிவு

உதகை: உதகையில் நேற்று கோலாகலமாக தொடங்கிய குதிரைப் பந்தயத்தில் தமிழ்ப் புத்தாண்டு கோப்பையை ‘டார்க் சன்’ தட்டிச் சென்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனின்போது சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் ஏப்ரல் 14 முதல் ஜூன் வரை குதிரைப் பந்தயங்கள் நடைபெறும். அதன்படி, 135-வது குதிரைப் பந்தயம் நேற்று தொடங்கியது. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான நேற்று 7 போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டு கோப்பைக்கான போட்டியில் 8 குதிரைகள் பங்கேற்றன. இதில், ‘டார்க் சன்’ என்ற குதிரை வெற்றி பெற்றது. குதிரையில் ஜாக்கி நஹத் சிங் சவாரி செய்தார். வெற்றிபெற்ற குதிரையின் பயிற்சியாளர் ஜெ.சபாஸ்டியன் மற்றும் உரிமையாளருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டன. குதிரைப் பந்தயங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE