சென்னையில் கரோனா தொற்று இல்லாத மண்டலங்களாக மாறிய மணலி, மாதவரம்

By செய்திப்பிரிவு

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி, மாதவரம் மண்டலங்கள் கரோனா இல்லாத மண்டலங்களாக மாறியுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைத்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 21 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச்சேர்த்து தமிழகத்தில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.

நேற்று சென்னையில் மட்டும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து சென்னையில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மணலி மற்றும் மாதவரம் மண்டலங்கள் கரோனா தொற்று இல்லாத மண்டலங்களாக மாறியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி திருவெற்றியூர் மண்டலத்தில் ஒருவர், தண்டையார்பேட்டையில் 3 பேர், ராயபுரத்தில் 5 பேர், திரு.வி.க.நகரில் 7 பேர், அம்பத்தூரில் ஒருவர், அண்ணா நகரில் 8 பேர், தேனாம்பேட்டையில் 13, கோடம்பாக்கத்தில் 5 பேர், வளசரவாக்கத்தில் 2 பேர், ஆலந்தூரில் ஒருவர், அடையாறு மண்டலத்தில் 30 பேர், பெருங்குடியில் 2 பேர், சோழிங்கநல்லூர் 2 பேர் என்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE