உங்களைப் போல் காலில் விழவில்லை... பிரதமர் முன்பு கம்பீரமாக இருந்தார் முதல்வர் ஸ்டாலின் - பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து பிரதமர் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து கிடந்தார். முதல்வர் ஸ்டாலின் யார் காலிலாவது விழுந்தாரா, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி எடுத்துக் கொண்டு வந்தாரே அதுபோல நாங்கள் வந்திருக்கிறோமா, முதல்வர் கம்பீரமாக அமர்ந்து பிரதமரிடம் தமிழகத்தின் கோரிக்கையை எடுத்துக் கூறியிருக்கிறார். உங்களைப் போல காப்பாற்றிக் கொள்ள யார் காலிலும் விழவேண்டிய அவசியம் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை" என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக மக்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்து வைக்கும் வாய்ப்பாக இந்தச் சந்திப்பை உருவாக்கி, தமிழக முதல்வர் நேற்றும் இன்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களை சந்தித்து வருகிறார். இன்று காலை நிதியமைச்சரை முதல்வர் சந்தித்தார். மாலை தொழில் வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளை டெல்லி முதல்வருடன் சென்று தமிழக முதல்வர் பார்வையிட்டு வருகிறார். முதல்வர் அளித்திருக்கின்ற மனுக்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகள். தமிழகத்தின் நலனுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், எதிர்காலத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய முன்னெடுப்புகள் என, ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் துறை வாரியாக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தமிழகத்திற்காக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தார்.

பிரதமருடன் முதல்வர் அமர்ந்து பேசும் புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ளது. அந்தப் புகைப்படத்தை உற்று கவனித்தால், முதல்வர் எவ்வளவு கம்பீராமாக இருக்கிறார், முதல்வரின் கோரிக்கைகளை பிரதமர் எவ்வாறு உற்று கவனித்தார் என்பதும் அதை நன்றாகப் பார்த்தாலே அதற்கான சான்று விளங்கும். கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு வருகிற போதெல்லாம், எந்தச் சூழ்நிலைக்காக வந்தார், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லி வந்தது எல்லாம், நான் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியத்தை அவரே உருவாக்கியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து பிரதமர் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து கிடந்தார். முதல்வர் ஸ்டாலின் யார் காலிலாவது விழுந்தாரா, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி எடுத்துக் கொண்டு வந்தாரே அதுபோல நாங்கள் வந்திருக்கிறோமா, முதல்வர் கம்பீரமாக அமர்ந்து பிரதமரிடம் தமிழகத்தின் கோரிக்கையை எடுத்துக் கூறியிருக்கிறார். உங்களைப் போல காப்பாற்றிக் கொள்ள யார் காலிலும் விழவேண்டிய அவசியம் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும், ஒவ்வொரு முறை தமிழகத்தின் உரிமைகளை அடகு வைப்பதற்காக டெல்லி வந்தார்கள் என்பதுதான் உண்மை. அவர் பதவிப்பொறுப்பில் இருக்கிறவரை தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான பிரச்சினைகள் எல்லாம் வருகிற போது, வாய்மூடி மவுனிகளாக இருந்துவிட்டு இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவதோ, பேட்டிக் கொடுக்கும்போது பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வது சரியாக இருக்காது.

எடப்பாடி ஆட்சிப் பொறு்பபில் இருந்தபோது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக இருந்தாலும், உதய் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழக நலன்களுக்கு எதிராக வந்தபோதும், எல்லாவற்றுக்கும் மேலாக நீட் பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களுக்ககு விரோதமாக செயல்பட்டு அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, அந்த மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்குக்கூட முதுகெலும்பில்லாத எடப்பாடி பழனிசாமியின் அரசு, முதல்வரின் டெல்லி வருகை குறித்தும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் குறித்தும் அவர் விமர்சனம் செய்யும்போது நான் விலா நோக சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 'பல்வேறு சிக்கல்களில் மாட்டியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து மன்னிப்புக் கேட்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளரா' என கேள்வி எழுப்பி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE