டெல்லியில் 30 நிமிட சந்திப்பு - பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 14 கோரிக்கைகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தமிழகம், தமிழர்கள் தொடர்பாக 14 முக்கியக் கோரிக்கைகளை ஸ்டாலின் முன்வைத்தார்.

30 நிமிட சந்திப்பு: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவின் 14 அம்சங்கள்:

> நீர்வளப் பிரச்சனைகள்:

காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது.

> மீன்வளம்:

அ) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

ஆ) "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது.

> எரிசக்தி:

அ) நிலக்கரி குறித்த விவகாரங்கள் – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான ரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல்.

ஆ) ரெய்கார் – புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்.

> நிதி:

(i) மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது.

(ii) ஜூன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்.

> சுகாதாரம்:

(i) மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு.

(ii) உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல்.

> வேளாண்மை:

பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.

> தொழில்கள்

(i) காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகம்.

(ii) டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு

(iii) தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைத்தல்

(iv) சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்படுதல்

(v) மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைத்தல்.

> பள்ளிக்கல்வி:

தேசிய கல்வி கொள்கை -2020 என்பது மாநில சுயாட்சிக்கே எதிரானது. அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களும் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அந்தக் கொள்கை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

> சென்னை மெட்ரோ ரயில்:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - II- இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல்.

> பிற்படுத்தப்பட்டோர் நலன் 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்கக் கோரிக்கை.

> பொது:

(i) இலங்கை தமிழர் பிரச்சினை-ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள்.

(ii) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக.

> போக்குவரத்து

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் தேவை.

> சுற்றுச்சூழல்

(i) நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிடக் கோரிக்கை.

(ii) கூடங்குளம் அணுமின் திட்டம் – செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் தொடர்பாக (SNF)

> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்

நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும்: சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE