விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டுள்ள உயர் மின் கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து வந்தவாசி அருகே பாஞ்சரை கிராமத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உயர் மின் கோபுரம் மீது ஏறி முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அருகே பாஞ்சரை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகிராமங்களில் உள்ள விவசாயநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில். தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பாஞ்சரை கூட்டுச் சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் டி.கே.வெங்கடேசன், வட்டச் செயலாளர் ந.ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே சமைத்து உணவருந்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வராததால், அவர்களது போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது.
இதையடுத்து விவசாயிகளிடம், வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் மற்றும் தேசூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், உயர்மின் கோபுரம் மீது சங்க கொடியுடன் ஏறிய 6 விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றும் பலனில்லை. இதையடுத்து அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, உயர்மின் கோபுரத்தில் இருந்து விவசாயிகள் கீழே இறங்கி வந்தனர்.
அதேநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.