ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வாய்ப்பு இல்லை: அமைச்சர் பி.மூர்த்தி கருத்து

By செய்திப்பிரிவு

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வாய்ப்பு இல்லை. ஜிஎஸ்டி இழப்பீடு பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையுடன் தமிழக நிதி அமைச்சர், அதிகாரிகள் குழுவுடன் விரைவில் புதுடெல்லி செல்கிறோம். பதிவுத்துறை உயர் அலுவலர்கள் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை மீறி சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மோசடியாக பதியப்படும் பத்திரங்களை ரத்து செய்யவும், தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அவர்கள் தெரிவித்த சில திருத்தங்களை செய்து கோப்பு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். இதன் பின்னர் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் பதிவுத்துறையில் தவறுகள் பெருமளவில் தடுக்கப்படும்.

கடந்த பிப்ரவரி வரையில் பதிவுத்துறையில் ரூ.12,700 கோடி, வணிகவரித் துறையில் ரூ.93,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் பதிவுத்துறை மூலம் ரூ.13,500 கோடியும், வணிகவரித் துறை மூலம் ரூ.1.05 லட்சம் கோடியும் வருவாய் கிடைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE