விவசாயிகளிடம் இருந்து இனி 'டிகேஎம்9' ரக நெல் கொள்முதல் செய்யப்பட மாட்டாது: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: 'டிகேஎம்9' ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை நெல் கொள்முதல் நிலையங்கள் கைவிட வேண்டும் என்று தமிழ அரசு ஆணையிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 'டிகேஎம்9' ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இவ்வகை அரிசியினை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் வாங்க விரும்புவதில்லை. இந்த ரக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கூட இந்த அரிசியினை பயன்படுத்த விரும்புவதில்லை.

'டிகேஎம்9' ரக அரிசியினை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விரும்பாத நிலையில், விநியோகிப்பதைத் தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்து, எதிர்வரும் கேஎம்எஸ் 2022-2023 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 'டிகேஎம்9' ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் பிற சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE