மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, ஃபைபர் படகு மூலம் மீன் பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, மீன் விற்பனை உள்ளிட்ட மீன்பிடி சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு விபத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீனவர் நல வாரிய உறுப்பின அட்டையை, ஸ்மார்ட் அட்டையாக மாற்றுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் உறுப்பினர் அட்டைகள் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, "மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
30 ஆயிரம் உறுப்பினர்கள்
சென்னையில் 30 ஆயிரம் நல வாரிய உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், 15 ஆயிரம் மீனவர்களுக்கு முதல்கட்டமாக ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள உறுப்பினர்களுக்கு படிப்படியாக ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை வழங்கப்படும். பின்னர், புதிதாக சேருபவர்களுக்கு ஸ்மார்ட் உறுப்பினர் அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.