சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை அருகே வாகுடி ஊராட்சிக்குட்பட்ட புறம்போக்கு நிலத்தில் இருந்த சீமைக் கருவேல மரங்களை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டியுள்ளனர். அவர்களிடம் ஊராட்சித் தலைவர் மாயாண்டிசாமி, சீமைக்கருவேல மரங்களை வெட்டக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.
அப்போது அவர்கள் மாயாண்டிசாமியை தாக்கினர். இதையடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாகுடி கிராம மக்கள் மதுரை- ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை போலீஸார் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.