ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல்: சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு கடந்த 4-ம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலின் போது பதிவான கண்காணிப்புக் கேமரா காட்சிகளைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், இந்த மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் 8 உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த ஸ்டாலின் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தனர். மறைமுக தேர்தல் நாளன்று 3 திமுக உறுப்பினர்கள் வரவில்லை. இதனால் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை பறித்து கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தேர்தல் தள்ளிவைப்பு குதிரை பேரத்துக்கும், கட்சித் தாவலுக்கும் இடமளிக்க வாய்ப்பு உள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டும், பதில் அளிக்காததால், தேர்தல் அதிகாதிக்கு எதிராக தாமாக முன் வந்து சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் அதிகாரி இளவரசன் நேரில் ஆஜரானார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் 26-ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால் காவல் துறையினர் மனுதாரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை சிறையில் அடைத்து விட்டு மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாக கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உடனடியாக மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்தல் அதிகாரி பதிலளிக்க கால அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE