மேகேதாட்டு அணை விவகாரம்: திருச்சியில் மார்ச் 14-ல் தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமமுக சார்பில் வரும் மார்ச் 14-ம் தேதி திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் கர்நாடகா, இப்போதும் மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து அதற்கான நிதி ஒதுக்கியிருக்கிறது.

இதனைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவிரி பிரச்சினையில் உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை நமக்குப் பெற்று தந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அமமுக சார்பில் வருகிற மார்ச் 14-ம் தேதி திங்கட்கிழமையன்று காலை 11 மணி அளவில் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்கவிருக்கிறார்கள்.

தமிழகத்தின் உரிமையைக் காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE