8 மாவட்டங்களில் பாஜகவின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் கலைப்பு: அண்ணாமலை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாஜக மாவட்டத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளும் முழுமையாக கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அங்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8 கட்சி மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் மாவட்டத் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகின்றன.

பொறுப்பாளர்கள் நியமனம்

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்படி, திருநெல்வேலி - கட்டளை எஸ்.ஜோதி, நாகப்பட்டினம் - டி.வரதராஜன், சென்னை மேற்கு - டி.என்.பாலாஜி, வட சென்னை மேற்கு - மனோகரன், கோயம்புத்தூர் நகர் - ஏ.பி.முருகானந்தம், புதுக்கோட்டை - செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு - எஸ்.எம்.செந்தில் குமார், திருவண்ணாமலை வடக்கு - சி.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் 8 மாவட்டங்களில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, அந்த மாவட்ட நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம் அல்ல. இந்தமாவட்டங்களில் இன்னும் அதிக வெற்றிகளை குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE