கோவை: காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி

By செய்திப்பிரிவு

கோவை: கோவை - கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்று, நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும், அதிமுக மற்றும் சுயேச்சைகள் தலா 3 வார்டுகளிலும் வென்றிருந்தனர். திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கு 25-வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து இன்று நடந்த தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது, திமுகவைச் சேர்ந்த 20-வது வார்டு கவுன்சிலர் மனோகரன் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவர், திமுகவின் ஒன்றிய செயலாளராக உள்ளார்.

இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டதால், தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள கவுன்சிலர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதன் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், திமுக சார்பில் போட்டியிட்ட போட்டி வேட்பாளர் மனோகரன் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று கருமத்தம்பட்டி நகராட்சியின் முதல் தலைவரானார். இவருக்கு திமுக கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அதிமுக, சுயேச்சை கவுன்சிலர்களும் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 5 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சியினர் இன்று மதியம், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தின் முன்பு கோஷமிட்டபடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE