சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: உரிய தடுப்பு நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தியாகராய நகர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனுக்கு கை, கால் வாய் என உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டன. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சைப் பெற்ற சிறுவன் வீடு திரும்பினார்.

இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்க, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தியாகாத மைனர் சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டியதால், ஏற்பட்ட விபத்து என்பதால், இழப்பீடு வழங்க மறுத்து மனுவை நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சென்னை நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ். கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காப்பீட்டு நிறுவனம் தரப்பில், 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது என விதிகள் உள்ளன. விதிகளைமீறி சிறுவன் வாகனம் ஓட்டியபோது ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் இழப்பீடு வழங்க முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

காப்பீட்டு நிறுவனம் தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கண்ணம்மாள், இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேநேரம் இந்த வழக்கில் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்து விடும்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, அதை ஊக்குவிக்க கூடாது என்று அறிவுறுத்தினார். மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான சரியான தருணம் இது என்றும், இது போன்ற மேலும் ஒரு சம்பவம் நிகழாத வகையில் அச்சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE