திசையன்விளை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ஜெயகுமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துகுமார், பிரேம்குமார் மற்றும் தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல்செய்த மனு:
திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால்அதிமுக, பாஜகவை சேர்ந்தவர் கள் தலைவர், துணைத் தலைவராக வாய்ப்புள்ளது. ஆனால் திமுகவினர் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றும் நோக்கத்தில் தங்களை ஆதரிக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, திசையன்விளை பேரூராட்சியில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற போதுமான பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து, மனுதாரர்கள் 9 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அமைதியாக நடத்தவும் உத்தரவிட்டார்.