அறந்தாங்கியில் கட்சி நிர்வாகிகளை கண்டித்து தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர்கள் உண்ணாவிரதம்

அறந்தாங்கி நகராட்சியில் 2 வார்டுகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர்கள், தங்கள் கட்சியின் நகரச் செயலாளர், நிர்வாகிகளை கண்டித்து நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் வார்டு எண் 13-ல் போட்டியிட்ட தி.மஞ்சு மற்றும் 17-ல் போட்டியிட்ட சு.சுசிலா ஆகியோர் தோல்வியுற்றனர். இவ்விரு வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வேலை செய்யாமல், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் செயல்பட்ட திமுக அறந்தாங்கி நகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மஞ்சு, சு.சுசிலா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் அறந்தாங்கியில் உள்ள கலைஞர் படிப்பகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், திமுக வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE