கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்

கடலூர்: கடலூர் மாநாகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடலூரில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் 45 வார்டுகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மஞ்சக்குப்பம் புனிதவளனார் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக அந்த அறையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இந்தப் பாதுகாப்பு அறையை திறந்து மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களை, வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் வந்தனர். அப்போது அந்தப் பாதுகாப்பு அறையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கான சாவி தொலைந்துவிட்டதாக ஊழியர்கள் கூறினர். இதனால் ஆக்ஸா பிளேடு மூலம் அந்த அறை பூட்டை அறுத்து கதவை திறந்து மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனால் காலை 8.50 மணிக்கு பிறகு கடலூர் மாநாகராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநாகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் திமுக கூட்டணி 34 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், பாமக, பாஜக தலா 1 வார்டிலும், சுயேட்சைகள் 4 வாடுகளிலும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் இன்று (பிப்.23) கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுக. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் உழவர்சந்தை அருகே திரண்டனர்.

பாதுகாப்பு அறையின் பூட்டை ஆக்ஸா பிளேடு மூலம் அறுத்து திறந்தது குறித்து அதிமுக. வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த அறையை திறந்துள்ளனர். எனவே, கடலூர் மாநாகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பெண் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அனைவரும் அவரை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று இது குறித்து மனு அளித்துள்ளனர். அதிமுகவினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE