கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இரு நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய விழாவை இந்திய மக்களும், இலங்கை மக்களும் பல ஆண்டுகளாக இணைந்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் 11 மற்றும் 12-ம் தேதி நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கு தந்தையர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும், தமிழகம் மற்றும்இலங்கையைச் சேர்ந்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்களும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்களையும் அனுமதிக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE