சேலம்: தாரமங்கலத்தில் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் ஆர்வமுடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றிச் சென்றதை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் 9-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாட்டப்பன் கோயில் தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி வாசு. இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், பாரதி நாகராசு, ஜெயக்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகளான பாரதி, ஜெயக்குமார் இருவரும் எம்பிஏ பட்டதாரிகள்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடந்ததை முன்னிட்டு, சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் பாரதி நாகராசு, ஜெயக்குமார் சகோதரர் இருவரும் பெற்றோருடன் சக்கர நாற்காலியுடன் வந்து தனது ஜனநாயக கடமையை பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசிய அவர்கள், ''மாற்றுத் திறனாளிகளாக உள்ளவர்கள் எங்களைப் போன்று ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்பெறச் செய்யும் விதமாக, சிரமம் பார்க்காமல் கட்டாயம் வந்து வாக்களிக்க வேண்டும். அதேபோல, பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கான கடமை உணர்வை எண்ணி, நாட்டுக்கு நல்லது செய்ய கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்து, சமுதாய உயர்வுக்கு வழி வகை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என்று சகோதரர்கள் வலியுறுத்தி தெரிவித்தனர்.
» நெய்வேலியில் பயங்கர விபத்து: கார் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்
» மதுரையில் புதுப்புது உத்திகள்: வாக்குச்சாவடி வழிகளில் விழாபோல பந்தலிட்ட திமுக, அதிமுக
சக்கர நாற்காலியில் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றிச் சென்ற மாற்றுத்திறனாளி சகோதரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.