கடலூர்: நெய்வேலி இந்திராநகர் அருகே கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இந்நிலையில் இன்று (பிப்.19) மதியம் நெய்வேலி இந்திராநகர் காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மனைவி வனிதா (40), அவரது மகள் ஜனனி (15) ஆகியோர் காய்கறிகள் வாங்க அந்த சாலையில் உள்ள சாலையோர காய்கறி கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கி அப்துல் சுபான் மகன் அக்பர் பாஷா (62) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் இருவர் மீதும் மேதியது. இதில் சம்பவ இடத்திலேயே வனிதா உயிரிழந்தார். ஜனனி படுகாயம் அடைந்தார். மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் அமர்ந்திருந்த இந்திரா நகர் மாற்று குடியிருப்பை சேர்ந்த சின்னசாமி மனைவி முத்தம்மாள் (50), சாலையில் நின்றுகொண்டிருந்த மாற்றுக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ராணி (45), கட்டியம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி தங்கம் (52), பெரியாகுறிச்சி பகுதியை சேர்ந்த சாரங்கபாணி மகன் குமரேசன் (32), மாற்று குடியிருப்பை சேர்ந்த பொன்னன் மகன் சின்னசாமி (65) ஆகிய 5 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஓடிச் சென்று விபத்தில் படுகாயமடைந்த 6 நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வழியிலேயே முத்தம்மாள் உயிரிழந்தார். இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஐந்து பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் அக்பர் பாஷா காயமடைந்த நிலையில் போலீஸார் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை பணிகள் முடிவுறாததால் மக்கள் அவதி: விகேடி சாலை பணிகள் (விக்கிரவாண்டி,கும்பகோணம்,தஞ்சாவூர் சாலை) பல வருடங்களாக கிடப்பில் இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தொடர் விபத்துகளை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை சாலைப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.