மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு தமிழகத்தில் இருந்து போடியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் வேட்புமனு மட்டுமே செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு ஆவது உறுதியானது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில்: "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு, மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24.6.2014) முற்பகல் 11.00 மணிக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் அறையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மொத்தம் ஐந்து வேட்பாளர்களிடமிருந்து ஐந்து மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுள் அ.நவநீதகிருஷ்ணன் அளித்த வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்படுகிறது.
டாக்டர் கே.பத்மராஜன், வி. மன்மதன், த.நா.வேல்முருகன் சோழகனார் (எ) த.நா.அன்பு தமிழ்நாடு புரட்சி சந்தன மனிதன் சோழகனார் மற்றும் ஸ்ரீராமச்சந்திரன் ஆகிய நான்கு வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.