கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு சிறப்பு பணிக்குழு: ராமதாஸ் யோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: 'கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த, அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு பணிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோதாவரி-கிருஷ்ணா, பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை அவசர ஆலோசனை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்கது.

2022- 23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்த சூழலில் 5 மாநில ஆலோசனை நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என நாளையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE