விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசலை மானிய விலையில் வழங்க கோரிய மனு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசலை மானிய விலையில் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’தமிழக அரசு 2021-22ம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில், விவசாயத்துக்கு இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை தற்போது லிட்டருக்கு நூறு ரூபாய் அளவில் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்தபோதும், அதன் மீது வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் உள்ளூர் செஸ் வரிகளை மாநில அரசு விதிக்கிறது. பீஹார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ’ஏற்கெனவே விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை அரசு, மானிய விலையில் வழங்கி வருகிறது. பெட்ரோல் - டீசலை மானிய விலையில் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே இதுதொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்பதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE