சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தனது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 15, 16தேதிகளில் மதுரை, கோவையில் கமல் ஹாசன் பிரச்சார செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் மும்முரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரப்பயணம் மேற்கொள்ள உள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இன்று இக்கட்சி வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:
''நமது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழலற்ற, வெளிப்படையான, மக்கள் பங்கேற்புடன் கூடிய உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டம், வாக்குறுதிகளை விளக்கியும் வேட்பாளர்களை ஆதரித்தும் கோவை, மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
பயண விபரம் :
15.2.2022 செவ்வாய்க்கிழமை : மதுரை.
16.2.2022 புதன்கிழமை :கோவை.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.