உள்ளாட்சித் தேர்தலே நடக்காத கோடேரி மலைக்கிராமம்: அதிகரட்டி பேரூராட்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் போட்டியின்றி தேர்வு

நீலகிரி மாவட்டத்தில் இந்த முறை அதிகரட்டி, கேத்தி, பிக்கட்டி ஆகிய மூன்று பேரூராட்சிகளில் இருந்துதலா ஒரு சுயேச்சை வேட்பாளர்போட்டியின்றி தேர்வாகியுள்ள நிலையில், நகராட்சிகளில் 108 வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்கும் பேரூராட்சிகளிலுள்ள 183 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. போட்டியின்றி தேர்வான மூன்று சுயேச்சைவேட்பாளர்களில், அதிகரட்டி 12-வது வார்டில் தேர்வாகியுள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் சு.மனோகரனும் ஒருவர்.

அதிகரட்டி பேரூராட்சி 12-வது வார்டு கோடேரி மலைக் கிராமத்தில், இதுவரை உள்ளாட்சித் தேர்தலே நடைபெற்றதில்லை. எந்த கட்சியும் அங்கு போட்டியிட்டதில்லை.

இதுதொடர்பாக கோடேரி கிராம மக்கள் கூறும்போது, "ஊர்மக்கள் கூடி பேசி, ஒருமனதாக ஒருவரை சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய வைப்போம். அந்த நபரை எதிர்த்து யாருமே போட்டியிடமாட்டார்கள். இதனால், போட்டியின்றி உறுப்பினர் தேர்வு செய்யப்படுவது எங்கள்வழக்கம். இதே முறையில்தான் இந்த முறை, ஓய்வுபெற்ற ஆசிரியர்மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

போட்டியின்றி தேர்வான சு.மனோகரன் கூறும்போது, "எனக்குவிவரம் தெரிந்து, கோடேரி கிராமத்தில் மட்டும் வார்டு கவுன்சிலர் தேர்வுக்கான வாக்குப்பதிவு நடந்ததில்லை. இந்த கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன. அதில், 584 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மணி என்ற சுயேச்சை வேட்பாளரை போட்டியின்றி தேர்வு செய்தோம். இந்த தேர்தலில் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். இது, எங்கள் கிராமத்தில் வழக்கமான ஒன்று.

குடிநீர், சாலை, நடைபாதைஉள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பெற வேண்டியிருக்கிறது. அதேபோல, அதிகரட்டி பேரூராட்சியை ஊராட்சியாக மாற்றும் பணியையும் செய்ய வேண்டியிருக்கிறது. ஊருக்குள் கட்சி பேதமின்றி அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான், இந்த தேர்வு முறையின் அடிப்படை நோக்கம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE