`மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தால் தமிழகத்தில் இதுவரை 48.50 லட்சம் பேர் பயன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சுகாதாரத் துறை சார்பில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று,மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்ள தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை உள்ளிட்ட சேவைகள் இதில்வழங்கப்படுகின்றன.

முதல்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்பசுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சென்னை, கோவை, நெல்லை மாநகராட்சிகளில் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்கள், அனைத்துஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் இதுவரை 48 லட்சத்து 50 ஆயிரத்து 213 பேர் பயனடைந்துள்ளனர். 42 லட்சத்து 77,703 பேர் தொடர் சேவைகளைப் பெற்றுள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE