கல்லூரி மாணவியை கொன்ற சக மாணவருக்கு ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற சக கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ஆதியனேந்தலை சேர்ந்தவர் உதயகுமார் (28). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த மதுரையைச் சேர்ந்த சோனாலி (21) என்ற மாணவியை காதலித்து வந்தார். உதயகுமார் கல்லூரிக்கு சரிவர வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. உதயகுமாருடன் சோனாலி பேசுவதை நிறுத்திவிட்டார்.

கடந்த 2016-ம் ஆகஸ்ட் 30ம் தேதி கல்லூரி சீருடையில் சோனாலி வகுப்பறைக்கு நுழைந்த உதயகுமார், அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினார். தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ்குமாரை தாக்கி, மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, கரூர் தனியார் மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிப்பட்ட மாணவி, மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று அளித்த தீர்ப்பில், கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை, ஆபாசமாக திட்டியதற்காக 3 மாத சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத் தவறினால் மேலும் 15 நாள் சிறை, கட்டையால் தாக்கியதற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை, கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாத சிறை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை எனவும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும், அபராதத் தொகை ரூ.23,000, மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்கவும், பெண்ணின் தாயாருக்கு இழப்பீடு வழங்க இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அரசுக்கு பரிந்துரை செய்யவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE