திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடம் மீட்பு: தஞ்சை மாநகராட்சி நடவடிக்கை

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரூ.100 கோடி மதிப்பில் திமுக பிரமுகரிடம் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஓட்டியுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இயங்கி வருகிறது, இந்த சபாவில் நாடகம் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சுதர்சன சபா கடந்த காலங்களில் திமுக பிரமுகர் ஆர்.கே. ராமநாதன் என்பவருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த சுதர்சன சபா வளாகத்தில் மாநகராட்சி அனுமதி இன்றி மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் விற்பனைகடை, பேக்கரி ஆகியவை தனியாரால் கட்டப்பட்டு அவை அனைத்தும் உள் வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் கட்டவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கையின் பேரில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட இடத்தை ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975 ன் படி தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து இன்று (1 ஆம் தேதி) மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

மாநகராட்சி கையகப்படுத்திய இடத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ.100 கோடி இருக்கும் என தெரிய வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE