தஞ்சாவூர்: தஞ்சாவூர் வடக்குவீதியில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையை மர்ம நபர்கள் பெயர்த்து கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் வடக்குவீதி பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி வழியே சென்றவர்கள், அந்த சிலை காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலை பெயர்த்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த அதிமுக கரந்தை பகுதிச் செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி, 8-வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் அதிமுகவினர் வைத்தனர்.
இதுகுறித்து அதிமுகவினர் போலீஸில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.