வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது: குனியமுத்தூர் மக்கள் நிம்மதி

By செய்திப்பிரிவு

கோவை : கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர், பி.கே.புதூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகள் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அறிந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பொறுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராவை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பிகே புதூரில் உள்ள தனியார் குடோனுக்கு சிறுத்தை வந்து செல்வதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தனியார் குடோனில் இறைச்சியுடன் கூடிய கூண்டு அமைத்து கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கடந்த 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்றிரவு கூண்டில் அகப்பட்டது. இதனிடையே, பிடிப்பட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக கோவை மாவட்ட மக்கள் ஒரு வித அச்சத்துடன் இருந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தை பிடிப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், ஊருக்குள் மீண்டும் சிறுத்தை வாராத வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE