புதுச்சேரியில் புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 21) வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 6,093 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 1,985 பேர், காரைக்கால் - 411, ஏனாம் - 105, மாஹே - 27 பேர் என மொத்தம் 2,528 பேருக்கு (41.49 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. (நேற்றைய பாதிப்பு 2,783).

இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 870 ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 139 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 13,983 பேரும் என மொத்தம் 14,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சேர்ந்த 70 வயது முதியவர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது.

புதிதாக 1,458 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 850 (89.17 சதவீதம்) ஆக அதிகரித்தது. இதுவரை 15 லட்சத்து 15 ஆயிரத்து 818 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE