பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜன.14-ல் நடைபெ றவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மதுரை மாநகராட்சி சார்பில், மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, அவனியாபுரத்தில் ஜன.14-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி நடந்த பிறகே அடுத்தடுத்து பாலமேடு, அலங்காநல்லூர் அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி யில் பங்கேற்கும் காளைகளுக்கான உடல் தகுதித்தேர்வு முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
இந்த முன்பதிவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன்களை காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் மரத்தடுப்புகள் அமைத்தல், மாடுகள் உள்ளே, வெளியே வந்து செல்லும் இடங்கள், பார்வையாளர்கள் அமரும் இடம், வாடிவாசல், அவசரக் கால வழி போன்றவை முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
மேலும், போட்டி நடக்கும் நாளில் மருத் துவ முகாம்கள், போட்டியில் பங்கேற்போர், பார்வையாளர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தயார் செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன.
மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, பணிகளை விரைந்து முடித்து ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசலைத் தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) தங்கத்துரை, உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.