கரோனா பரிசோதனைக் கட்டணத்தை ரூ.500ஆகக் குறைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிற மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை ரூ.500 ஆகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்குத் தடையாக உள்ளது.

இந்தியாவில் நமது அண்டை மாநிலங்களாக கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் தனியார் ஆய்வகங்களில் கரோனா சோதனை ரூ.500க்கு செய்யப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் அரசு நிறுவனங்களில் கரோனா சோதனைக்கு ரூ.350 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகக் குறைவாக ஆந்திரத்தில் தனியார் ஆய்வகங்களில் கரோனா சோதனைக் கட்டணம் ரூ.475 ஆக உள்ளது. ஆனால், மருத்துவக் கட்டமைப்பில் முன்னேறிய தமிழகத்தில் மட்டும் கரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாகவுள்ளது.

தமிழக அரசு முகாம்கள் மூலம் கரோனா சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் இது ரூ.900 ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரோனா சோதனைக் கட்டணம் ரூ.600 ஆக உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாட்டில்தான் கரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவறு.

2020-ம் ஆண்டில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது ஆர்டி-பிசிஆர் கரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சில ஆய்வகங்களில் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆர்டி-பிசிஆர் ஆய்வுக் கருவிகள் தாராளமாக கிடைக்கத் தொடங்கிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.3,000 ஆகவும், வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச் செல்ல ரூ.500 கூடுதல் கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் கரோனா பரிசோதனைக் கட்டணம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களாகவே ரூ.500தான் மற்ற மாநிலங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கடந்த மே மாதம் முதல் இதே கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. அதன்பின் மற்ற மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்தபோதிலும் தமிழகம் குறைக்கவில்லை.

முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இப்போது கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இத்தகைய சூழலில் அதிக எண்ணிக்கையில் கரோனா சோதனைகளைச் செய்வதன் மூலம்தான் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நேற்று 1.35 லட்சம் சோதனைகள் மட்டும்தான் செய்யப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவு. கரோனா சோதனைகளை ஒரு நாளைக்கு 3 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்தால்தான் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு இல்லாமல் சோதனைகளை அதிகரிக்க முடியாது. தமிழகத்தில் இன்றைய நிலையில் மொத்தம் 321 கரோனா ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 69 மட்டுமே அரசு ஆய்வகங்கள். மீதமுள்ள 252 ஆய்வகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை. அவற்றில் கட்டணம் குறைக்கப்பட்டால் மக்கள் தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனைகளைச் செய்துகொள்வர். அதற்கு வசதியாக தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியார் ஆய்வகங்களின் கரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.500 ஆகக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE