ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 அரவைப் பருவத்திற்கு கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையை நிர்ணயம் செய்து வருகிறது. கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு மேல் கூடுதலாகத் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி நிதி நிலை அறிக்கை 2021-2022 அறிவிப்பின்படி, கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.42.50/-, சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150/- என மொத்தம் ரூ.192.50/- தமிழக அரசால், மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,707.50-ஐ விட டன் ஒன்றிற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்படி 2020-21ஆம் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.2,900/- கிடைக்கப் பெறுகிறது.

அதன்படி, தமிழக அரசால், 2020-2021 அரவைப் பருவத்தில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 17 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய தகுதியுடைய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக, மொத்தம் ரூபாய் 150 கோடியே 89 லட்சம் வழங்கும் பணியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.1.2022) தலைமைச் செயலகத்தில் 5 கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE