கொடைக்கானலில் காட்டாற்றுவெள்ளம்: ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் மக்கள்

திண்டுக்கல்: கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளநிலையில் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. 31-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மெரினா டிஜிபி அலுவலகத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 5 மணிநேரத்தில் விடாமல் பெய்த மழை சென்னை நகரையே மீண்டும் வெள்ளக்காடாகிவிட்டது.

இந்த மழை திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை, வேடசந்தூர், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் நேற்று இரவு (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் இருக்கும் மலைக்கராமங்களில் இன்று காலை கீழ்மலை கிராமப் பகுதிகளில் இருக்கக்கூடிய பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கொடைக்கானல் அருகே இருக்கக்கூடிய பள்ளங்கி மூங்கில்காடு போன்ற மலை கிராமங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஆபத்தான முறையில் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் நிரந்தரப் பாலம் கட்டித்தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பிவருகின்றனர். ஆனால் இதுநாள்வரை இப்பிரச்சினைக்கு அரசு தீர்வுகாணவில்லை என்ற குற்றச்சாட்டையும் அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE