தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை: மீனவர்கள் கடலுக்குச் செல்லவேணடாம் என எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 3 நாட்களுக்கு தென்கடலோர மாவட்டங்களில் மழை உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடக்கு சுழற்சி காரணமாக யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 3 நாட்கள் தொடர்ந்து மழை நீடிக்கும் எனவும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இன்று(2.3.2022): தென்தமிழக கடற்கரையை ஒட்டி 3.6 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய இலங்கை பகுதியில் 1 கிலோமீட்டர் உயரம்வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, தேனி தென்காசி, ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (3.1.2022): தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளைமறுதினம் (4.1.2022): தென்தமிழக மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: 2.01.2022 முதல் 3.01.2022 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள்இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE