ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைள்- காஞ்சி அரசு மருத்துவமனையில் மத்தியக் குழு ஆய்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் ஒமைக்ரான் என்னும்உருமாறிய கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய மருத்துவ ஆய்வுக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக் குழுவில் மருத்துவர்கள் வினிதா, பிரபா, சந்தோஷ்குமார், தினேஷ் பாபு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த அவர்கள் அங்குள்ள மருத்துவர்களுடன் முதலில் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கரோனா வார்டுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்த தொற்றைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த ஆலோசனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். மருத்துவமனையின் பல்வேறு பகுதிகள், ஆய்வகங்கள் ஆகிய இடங்களிலும் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநர் சித்திர சேனா, தொற்று நோய்த் தடுப்பு இணை இயக்குநர் சம்பத், குடும்ப நலக் கட்டுப்பாட்டுத் துறை துணை இயக்குநர் விஜயகுமார், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை (பொறுப்பு) கண்காணிப்பாளர் மகேஸ்வரி, பொறுப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் உடன் இருந்தனர்.

மருத்துவக் குழுவினர் ஆய்வைத் தொடர்ந்து அறிக்கையைஅரசுக்குச் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE