திருவொற்றியூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளுக்கு அதே பகுதியில் புதிய வீடு: அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளுக்கு அதே பகுதியில் புதிய வீடு ஒதுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததால் அதில் குடியிருந்த 24 குடும்பங்கள் தங்களின் அனைத்து உடமைகளையும் இழந்து வீதிக்கு வந்துள்ளன. அவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடமும், ரூ.1 லட்சம் நிதியும் அரசு வழங்கியிருப்பது நல்ல நடவடிக்கை. பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தங்களுக்கு வேறு இடத்தில் வீடு ஒதுக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

அவ்வாறு ஒதுக்கப்பட்டால் அவர்கள் திருவொற்றியூர் பகுதியில் கிடைக்கும் வாழ்வாதாரங்கள், கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிடும். இது அவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். திருவொற்றியூரில் இடிந்த வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கும், அச்சம் காரணமாக அருகிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறியவர்களுக்கும் திருவொற்றியூர் பகுதியிலேயே உடனடியாக வீடுகளை ஒதுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவொற்றியூரில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க இயலவில்லை என்றால், இடிந்த வீடுகளைக் குறிப்பிட்ட காலத்தில் புதிதாகக் கட்டி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு மாத வாடகையாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE