தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் சிலர் கோயில் கோபுரத்தின் மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுஉள்ளதாக கூறி, வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் கோயிலை இடிக்க முடிவு செய்து, கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு, நிர்வாகிகள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் கோயிலை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் ஏராளமானோர் கோயில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலர் கோபுரத்தின் உச்சியில் ஏறி, கோயிலை இடிக்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அடுத்து குன்றத்தூர் வட்டாட்சியர் பிரியா தலைமையில் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்காத பக்தர்கள் வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸார் போதிய அளவில் பாதுகாப்புக்கு இல்லாததால் தற்காலிகமாக கோயிலை இடிப்பது கைவிடப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரதராஜபுரம் அருகே அடையாறு ஆற்றையொட்டி 30 சென்ட் பரப்பளவில் கோயில், சர்ச், சில குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் அவற்றை அகற்ற முடிவுசெய்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போதிய போலீஸார் இல்லாததால் ஆக்கிரமிப்பை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE