பேருந்து படியில் பயணம் செய்த மாணவர் உயிரிழப்பு: ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதற்கிடையே, படியில் பயணம் செய்யும் மாணவர்களை தடுக்காவிட்டால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதுகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (18). இவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினேஷ்குமார் நெமிலியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தினசரி பேருந்தில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும், காஞ்சிபுரத்தில் இருந்து சேத்தமங்கலம் வழியாக நெமிலிக்கு செல்லும் தனியார் பேருந்தின் முன் படிக்கட்டில் தொங்கியபடி தினேஷ்குமார் பயணம் செய்தார். நெமிலி அடுத்த பள்ளூர் அருகே பேருந்து வந்தபோது நிலை தடுமாறிய தினேஷ் குமார் தவறி கீழே விழுந்தார்.

இதில், பேருந்து பின்சக்கரம் அவர் மீது ஏறியதில் அவர் படு காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டுகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெமிலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம் பாகாயம் அருகே அரசுப் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த போது அதில் ஒரு மாணவர் கீழே விழுந்து காயமடைந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனைத்தொடர்ந்து, சம்பந்தப் பட்ட பள்ளி ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மாண வர்களின் பெற்றோரை நேரில் அழைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விசாரணை நடத்தினார். பிறகு, பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்களை தடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE