இரண்டாவது முறையாக குடியரசு தலைவரிடம் விருது பெறும் புதுவை பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர் வெங்கடசுப்ரமணியன் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் கையால் விருது பெற தேர்வாகியுள்ளார்.

முதல் முறை பால சக்தி புரஸ்கார் விருது பெற்ற இவர் இம்முறை இந்திய அரசின் சமூகநீதி அதிகாரம் அளித்தல் துறை மூலம் இந்த ஆண்டின் சிறந்த ஆற்றல் உள்ள நுண்ணறிவு மிக்கவர் என்ற தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி, நெல்லித்தோப்பைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன் மத்திய பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இடது கை குறைபாட்டுடன் பிறந்தாலும், வெங்கட சுப்பிரமணியன் நம்பிக்கையைக் கைவிடவில்லை. தன்னம்பிக்கையோடு படிப்பு, இசை, கராத்தே, சமூகப் பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப் பணி, பிறமொழிக் கற்றல் என பல துறைகளிலும் இவர் சிறப்பிடம் பெற்றுள்ளார். இதைப் பாராட்டி அவருக்கு பாலசக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கடந்த 2020 ஜனவரியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் வழங்கி கவுரவிக்கப்பட்டார். பிரதமர் மோடியும் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து, பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேசிய இளைஞர் முகாம்களில் பங்கேற்று பலமுறை சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். மேலும் இவரது தனித்திறமையை அங்கீகரித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தனிச் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசின் சார்பில் சென்ற ஆண்டு 2020-ல் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்வரால் பாராட்டு சான்றிதழ். ரொக்கப்பரிசு அளித்து பாராட்டும் பெற்றார். 'கரோனா' தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் விளங்கியுள்ளார்.

மாற்றுத் திறனாளியான இவரது பணிகளை சிறப்பித்து போற்றும் வகையில் இந்திய அரசின் சமூகநீதி அதிகாரம் அளித்தல் துறை மூலம் இந்த ஆண்டின் சிறந்த ஆற்றல் உள்ள நுண்ணறிவு மிக்கவர் என்ற தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் சிறந்த மாற்றுத் திறனாளி நுண்ணறிவுப் பெற்றவர் என்ற தேசிய விருதினை வரும் டிசம்பர் 3-ந் தேதி விஞ்ஞான்பவன் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கி கௌரவிக்க உள்ளார். இரண்டாவது முறையாக குடியரசுத்தலைவர் கையால் இம்முறை தேசிய விருதினை இவர் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE