முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்தான் மழை நீரை வெளியேற்ற முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு சரியாகத் திட்டமிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கூறும்போது, "தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையை நாங்கள் சிங்கப்பூர் அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம். ஆயிரம் கோடி செலவில் மழை நீர் வடிகால்களைக் கட்டி இருக்கிறோம் என்று கூறினார். மழை பெய்தால் சென்னையில் மழை நிற்காது என்று கூறினார். ஆனால், இந்த மழையில் தொடர்ந்து எட்டு நாட்கள் தண்ணீர் தேங்கியது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்தான் மழை நீரை வெளியேற்ற முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் பருவ மழைக்காக முந்தைய அரசு எடுத்த நடவடிக்கைகளில் எந்தப் பலனும் இல்லை. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.