திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஏரிகளை இணைத்து, 'கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்’ என்ற புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாக 1,485.16 ஏக்கர் பரப்பளவில், ரூ.380 கோடி மதிப்பில் இது அமைந்துள்ளது.
இந்த நீர்த்தேக்கம் முதல்முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது. நேற்று மாலை நிலவரப்படி, இந்த நீர்த்தேக்கத்துக்கு விநாடிக்கு 90 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, விநாடிக்கு 90 கன அடி உபரிநீர், கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் உபரிநீர், கால்வாய் மூலம் பூவலம்பேடு, ஈகுவார்பாளையம், ஏடூர் ஏரிகளை நிரப்பிவிட்டு, பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.