பசும்பொன்னில் நடந்த தகராறில் ஒருவர் கொலை

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் தேவர் இளைஞரணி என்ற பெயரில் ஒரு தரப்பும், சிவன் பாய்ஸ் என்ற பெயரில் மற்றொரு தரப்பும் ஜோதி ஓட்டம் எடுக்க திட்டமிட்டனர். ஊர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இருதரப்பும் சேர்ந்து அக்.28-ம் தேதி ஜோதி எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் தேவர் இளைஞரணியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன்(45) உள்ளிட்ட சிலர் சிவன் பாய்ஸ் தரப்பைச் சேர்ந்த இளைஞர்களை அடித்து திட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவன் பாய்ஸ் தரப்பைச் சேர்ந்த கார்த்திக், அய்யமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து, பசும்பொன்னில் மடம் அருகே அமர்ந்திருந்த முருகனை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இது தொடர்பாக பசும் பொன்னை சேர்ந்த கார்த்திக் (22), அய்யமூர்த்தி (25), வாகைக்குளத்தைச் சேர்ந்த லட்சுமணன், ஓ.கரிசல்குளத்தைச் சேர்ந்த தேவகரன் (19), ராமபாண்டி, குழந்தைவேல், பசும்பொன்னைச் சேர்ந்த மோகன்ராஜ் (22), கருப்பசாமி (26) ஆகியோர் மீது கமுதி போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதில் கார்த்திக், தேவகரன், மோகன்ராஜ், கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE