கோடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட், பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை நீதிபதி சஞ்சய் பாபா இன்றைக்கு (அக். 28) ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்டக் காவல்துறையினர் கடந்த 25-ம் தேதி கைது செய்த நிலையில், தனபாலை போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸார் உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சஞ்சய் பாபா ஏற்றுக்கொண்டார். இதன் பேரில் கூடலூரில் சிறையிலிருந்து தனபால் உதகை நீதிமன்றத்துக்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE