ராமேசுவரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்வாங்கியது.
தென்கிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடலில் உருவான சூறாவளிக் காற்றால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் நேற்று பலத்த காற்று வீசியது. இதில் தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. முகுந்தராயர் சத்திரம் மீன் இறங்குதளம் மீது 15 அடி உயர ராட்சத அலைகள் மோதின.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. வாடைக் காற்று காலங்களில் இதுபோன்று கடல் நீர் உள்வாங்குவதும், மாலை அல்லது இரவு நேரங்களில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்று தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.