நீலகிரியில்‌ இன்று‌ மிக கனமழை பெய்யும்; 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

நீலகிரியில்‌ இன்று‌ மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்‌ முனைவர்‌ நா.புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாக,

16.10.2021:

நீலகிரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழையும்‌, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கன்னியாகுமரி, சேலம்‌, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

17.10.2021:

மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம்‌, மாவட்டங்கள்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

18.10.2021, 19.10.2021:

தமிழகம்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌

16.10.2021: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக் கடல்‌ பகுதிகள்‌

16.10.2021: தென்‌கிழக்கு அரபிக் கடல்‌, கேரளா மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE