புதுச்சேரியில் தீபாவளி கைத்தறிக் கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் தீபாவளி கைத்தறிக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாண்டெக்ஸ் விற்பனையரங்கில் தீபாவளி கைத்தறிக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி இன்று (அக். 15) திறந்து வைத்து, விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

எம்எல்ஏ ஜி.நேரு, புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (பொறுப்பு) உதயகுமார், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்கள் சாரங்கபாணி, ஜோதிராஜ், கூட்டுறவு நகர வங்கி மேலாண் இயக்குநர் ஆச்சார்யலு, புதுச்சேரி லாஸ்பேட்டை, சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, ராஜாஜி நகர், திருவள்ளுவர், முதலியார்பேட்டை பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், இயக்குநர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சி குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதுச்சேரி மாநிலத்தின் தொன்மையும், பாரம்பரியமும் கொண்ட கைத்தறி நெசவாளர்களின் கைத்திறனால் உருவாக்கப்படும் கைத்தறி துணி வகைகளின் விற்பனைக் களஞ்சியமாக, புதுச்சேரி மாநில நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த 1957-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரசின் நல்லாதரவுடன், மாநிலத்தில் செயல்பட்டு வரும் 10 பிரதம நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி செய்யும் துணிகளைக் கொள்முதல் செய்து, பாண்டெக்ஸ் என்ற பெயரில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள தனது 12 கிளைகள் மூலமும், தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சிகள் மற்றும் சிறப்பு விற்பனை அரங்குகள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வகையில், கடந்த 2020-21ஆம் ஆண்டில் பாண்டெக்ஸ் மூலம் ரூ.2.65 கோடி அளவில் கைத்தறி துணி வகைகள் விற்பனை நடைபெற்றது. இதேபோல், நிகழாண்டில் தீபாவளி கைத்தறிக் கண்காட்சி மற்றும் பிற விழாக்கால விற்பனையாக ரூ.6 கோடி அளவில் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்து விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில அனைத்து நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்கும் விதத்தில் அரசு மூலம் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE